Friday, May 29, 2009

சிவப்பான பெண் தேடுபவரா நீங்கள்? வாங்க..வாங்க...




நல்லா செக்கச் செவேல்னு செவப்பா இருக்க பொண்ணு தான்யா நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தக் காலில் நிற்கிற ஆளுங்களுக்காக எழுதிற பதிவு தான் இது.


"சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் மணமகனுக்கு நன்கு படித்த,வேலை பார்க்கும், சிவப்பான,குடும்பப்பாங்கான மணமகள் தேவை."
இப்படி தான் மணமகள் தேவையில் பெரும்பாலான விளம்பரங்கள். இதை கொஞ்சம் Detailஆ Analyse பண்ணுவோம்.


மனசாட்சி: நல்லா கேக்குறாங்கய்யா...டீடேய்லு....


முதல்ல, குடும்பப்பாங்கான பொண்ணு வேணும்னு கேட்டு இருக்காங்க. சரி. நம்ம அம்மா, அப்பா, கூட பொறந்தவங்கள அடிச்சு விரட்டாம, நல்லா பாத்துப்பா...வீட்டுக்கு வர்றவங்கள சோறு, காபி தண்ணி கொடுத்து நல்லா கவனிப்பா,குடும்ப பொறுப்பை ஏற்று, வீட்டை கல கலப்பா வச்சிப்பா, அப்படிங்கர எண்ணத்துல. சரி. இது ரொம்ப நியாயமான, அத்தியாவசியமான requirement.இந்த requirement OK.


அடுத்த requirement க்கு வாங்க, படிச்ச பொண்ணு வேணும்னு கேக்குது அந்த விளம்பரம். சரி, படிச்ச பொண்ணு, இப்ப இருக்கிற நாகரிக காலத்துக்கு ஏத்த மாதிரி இருப்பா, டஸ் புஸ்னு இங்கிலிஷ் பேசுவா, நம்ம பந்தாவா, வெளியில போற இடத்துல மதிப்பா நடந்துப்பா, குழந்தைகளை நல்லா புத்திசாலிகளா வளர்ப்பா, அப்படிங்கர எண்ணத்துல இருக்கலாம். So, இந்த படிச்ச பொண்ணு Requirement OK தான்.


அடுத்து, வேலைக்குப் போற பொண்ணு வேணும்னு ஒரு Requirement. ஏன்னா, ஒருத்தர் சம்பலத்துல வண்டிய ஓட்ட முடியாது, குக்கர் வாங்கிறதுக்கும், டிவி வாங்கிறதுக்கும் EMI கட்டி கஷ்டப்படாம இருக்கணும். பொண்ணும் வேலைக்கு போனால் கொஞ்சம் வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ளலாம். so, இந்த Requirement கூட ஓகே தாங்க.

அடுத்து தான் மேட்டரே! அது என்னங்க சிவப்பான பொண்ணு. அதுவும் இல்லாம இந்த Requirement சொல்றது அவங்க பெற்றோர்கள் இல்ல, மணமகன் தான். மற்ற Requirement எல்லாமே ஒகே தாங்க.


சரி அதுக்கும் reason தேட try பண்ணுவோம்.


1. சிவப்பான பொண்ணு கூட இருந்தா பந்தாவா, ஊரே ஆ என்று பாக்கும், மற்றவர்கள் எதிரில் மதிப்பா இருக்கும். "சூப்பரான பொண்ண கட்டிக்கிட்டு வந்துட்டாண்டா, ரொம்ப லக்கி டா அவன்", அப்படின்னு சொல்லுவாங்க.
ஐயா, யார் பார்க்குறதுக்கு நம்ம கல்யாணம் பண்றோம், யார் சந்தோஷத்துக்கு நம்ம கல்யாணம் பண்றோம்னு கொஞ்சம் நினைச்சு பாக்கணும். எப்படி ஒரு சாதியை பார்த்து மதித்த காலம், கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறதோ, அதே போல சிவப்பின் மீது உள்ள போலி மரியாதை, மறையத் தொடங்கியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். So, இந்த Reason பொருத்தமா இல்லையே! இதுல பந்தாவோ, மதிப்போ எதுவும் இருக்குற மாதிரி எனக்கு தெரியல.


2. வேற பல விஷயங்கள்ல சிவப்பு சந்தோஷத்தை அளிக்குமோ?
எந்த விஷயத்துல சிவப்பு சந்தோஷம் அளிக்கும்......சரி, சுத்தி வலைச்சு பேசாம, பளிச்சுன்னு சொல்லிடுறேன். விளக்கை அணைத்த பிறகு, எல்லாமே ஒண்ணு தாங்க. கருப்பு, சிவப்பு, மாநிறம் இது எதுவுமே தெரியாது. உடலும், உள்ளமும் இணையும் தாம்பத்யத்தில், நிறத்திற்கு வேலையே இல்லை.
சிலர் நக்கலாக கேக்குறது புரியுது, "சரி, விளக்கு அணைக்கல, அப்ப எப்படி பா "னு தானே? உங்க கேள்விக்கு, என்னுடைய நண்பர் ஒருவர் விளையாட்டா சொல்றத இங்கே சொல்றேன். "கோழி குண்டா இருந்தா என்ன? ஒல்லியா இருந்தா என்ன? நம்ம சாப்பிட போறது சூப் தானே!". ( பெண்ணுரிமை அமைப்புகள் மன்னிச்சுக்கோங்க...மயிலே,குயிலே,நிலா,பூ அப்டின்னு சொன்னா ஒத்துப்பாங்க, கோழின்னு சொன்னா ஒத்துப்பங்களா?)

மனசாட்சி: ஐயோ சாமி, இப்ப என்ன தான் டா சொல்ல வர்ற, சொல்லித் தொலை


சாதியில் பாகுபாடு பார்க்குறது எவ்வளவு தவறான விஷயமோ, அதே போல தான் நிறத்தில் பாகுபாடு பார்ப்பதும் கேவலமான விஷயம். இப்படி நிறத்தைப் பார்த்து, மணப்பெண்களை தேடுறத விட, பொண்ணு எப்படி, பொண்ணோட வீட்டில் எல்லோரும் எப்படி, சொந்தம் பந்தம் எப்படி, நம்ம பாஷைல குலம் கோத்திரம்னு சொல்லுவாங்க. கோத்திரத்த கூட விடுங்க...குலம்.. தாய் தந்தையரின் குணநலங்களே ,பெரும்பாலான பிள்ளைகளுக்கு இருக்கும்னு சொல்லுது நம்ம சயின்ஸ். இப்படி இருக்க,அவங்க எல்லோரும் எப்படின்னு தெரிஞ்சுக்குறது முக்கியமாச்சே!
இப்படி நிறத்துக்கு அதிக Weightage கொடுத்து, மற்ற முக்கியமான விஷயங்களை கோட்டை விட்ராதீங்க!

மனசாட்சி: ஆமா...வந்துட்டார் சொல்றதுக்கு, பெரிய லார்ட் லபக்தாஸ் மாதிரி....

கருப்போ,சிவப்போ எல்லாமே ஒண்ணுதாங்க !
வெள்ளை மனசோட வர்ற, எந்த கலர் ரோசாவை சந்தோஷமா ஏத்துக்க நம்மல பக்குவப் படுத்திக்குவோமுங்க!

மனசாட்சி: ஹ்ம்ம்ம்ம்...இப்பவே கண்ண கட்டுதே......முடியல

இந்த மாதிரி Select பண்றதுல பொண்ணுங்க தாங்க ரொம்ப உஷார். அவங்க விடுக்கிற விளம்பரத்தைப் பார்ப்போம்.
"பி.காம் படித்த பெண்ணுக்கு, நல்ல, Professional Degree படித்த,இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ, நிரந்தர வேலையில் உள்ள, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மணமகன் தேவை"


ரொம்ப Clear அ Love,Security and stability தான் எங்க Priority சொல்லுது பெண்குலம்.

மனசாட்சி: அதெல்லாம் சரி, உபதேசம் ஊருக்கு தானா....நீங்க எப்படி?

"ESCAPE ஆயிடுறா கைப்புள்ள....."

இதெல்லாம், நம்ம பார்த்ததுல, நமக்கு கிடைத்த அனுபவத்துல எழுதினது. யாரையும் புன்படுத்தி இருந்தாலோ, கொஞ்சம் ஒவரா பேசி இருந்தாலும்லைட்டா தலையில கொட்டிட்டு மன்னிச்சு விட்றுங்கோ !


Tuesday, May 26, 2009

குழந்தைகளை நமக்கு ஏன் பிடிக்கிறது?



  • அடிச்சா திரும்பி அடிக்காது


  • ஒரு ஊர்ல...அப்படின்னு ஆரம்பிச்சு, எவ்ளோ மொக்கை கதை சொன்னாலும் ஆர்வத்தோட கவனிக்கும்

  • நம்மல எதிர்த்து பேசாது


  • கன்னா பின்னான்னு திட்டினாலும், அழுதுட்டு, உடனே சிரித்தபடியே நம்ம கிட்டயே ஓடி வரும்

  • நம்ம அடிக்கிற கூத்தை எல்லாம் வெளியில சொல்லாது


  • என்ன நிறம்,என்ன உடை,என்ன தகுதின்னு பாக்காம, யாராக இருந்தாலும் ஒரே மாதிரி பழகும்


  • பொய் பேச தெரியாது


  • மனசுல பட்டத அப்படியே சொல்லும், உள்ளே ஒண்ணு வச்சிகிட்டு, வெளியில ஒண்ணு பேச தெரியாது


  • நடந்தா விழுந்துடுவோம்னு தெரிஞ்சும், விடாம முயற்சி செஞ்சிட்டே இருக்கும்


  • நெருப்பு சுடும்னு சொன்னாலும், சொல்றத அப்படியே நம்பாம, ஆராய்ந்து கைய வச்சு பார்த்து தான் நம்பும்


  • தமக்கு இஷ்டப்பட்டதை செய்யும், மத்தவங்க சொல்றத பத்தி கவலைப் படாது


  • அம்மா தான் உலகம்னு நினைச்சு வாழும்


இதையே தான் எல்லா சம்யங்களும், எல்லா பெரியவங்களும் நல்லா வாழ்வதற்கு வழின்னு சொல்லி இருக்காங்க.


ஆக மொத்தம் இறைவன், எல்லோரையும் நல்ல குணநலங்களோடும், பண்புகளோடும் தான் படைத்து இருக்கிறான்.சமூகம், சமுதாயம் அப்படி இப்படின்னு சொல்லி, மூளைச்சலவை செய்து,already நல்லா இருக்கிற குழந்தையை super குழந்தையாய் மாத்துறேன்னு collapse பண்றது நாம தான்.



இதை எல்லாம் யோசிக்கும் போது இந்த பாட்டு தான் ஞாபகத்துக்கு வருதுங்க.



"எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,
பின் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை(சமுதாயம்) வளர்ப்பினிலே!"



ஏன்டா...நேத்து வரைக்கும் நல்லா தானடா இருந்தே....என்ன ஆச்சுனு.. நீங்க கேக்கறது புரியுது....

Freea விடுங்க...Freea விடுங்க..

Monday, May 25, 2009

விடலைப் பருவக் காதல்



வகுப்பு பதிவில்
என் பெயரையும் மறந்து
அவள் பெயருக்காக காத்திருப்பேன்,
"எஸ் சர் "
என்ற குரலுக்காக.


அவ்வளவு கூச்சலிலும்,
கடைசி வரிசையில் அமர்ந்திருந்தும்,
மெல்லியதாய் என் காதுகளுக்கு மட்டும்
கீர்த்தனையாய் இசைக்கும்
அவள் கொலுசின் ஓசை


சில நொடிகள் பேச
கண்ணாடி முன்
பல மணி நேர ஒத்திகை


சொந்தமே இல்லாத ஊரிலும்,
திருமணம்,விசேஷம் என்று சொல்லி
பேருந்தில் ஏறினேன்
அவள் போகும் ஊருக்கு
சேர்ந்து பயணம் செய்ய..


நாத்திகத்தை நசுக்கி,
அர்ச்சனை செய்ய வைத்தது,
அவள் பிறந்த நாள்


உனைக் காண்பதைத் தடுக்கும்
விடுமுறை நாட்கள்,
எனக்கு வெறுத்தே போயின.


காதலை ஒப்பிக்க காலம் தாழ்த்த,
வேறு ஊருக்கு இடம் பெயன்றாள் என்னவள்.
அவளில்லாத நான்,
ப்ரோசஸர் இல்லாத கணினியாய்
சாரமில்லாமல் இருக்க,
காலச் சக்கரம் மெல்ல சுழல ஆரம்பித்தது.


திடீரன ஒரு நாள்,
மறுபடியும் கொலுசொலி,
இம்முறை கீர்த்தனை அல்ல,
இது சிம்பொனி!


வகுப்பில் புதுவரவாக ஒரு முள்ளை!
அடடா...இவள் தான் நமக்காக பிறந்தவள்
என மனம் சொல்ல
தொடங்கியது இரண்டாம் இன்னிங்க்ஸ்!


இப்படி விடலை பருவத்தில்,
பள்ளிக் காதல்
கல்லூரிக் காதல்
அக்கம் பக்கத்துக் காதல்
கைப்பேசிக் காதல்
இணையக் காதல்
என
அனைத்தையும் காதலித்ததில்
அன்பு,
ஆரவாரம்,
சந்தோஷம்,
ஆர்ப்பாட்டம்,
கனவு,
கொண்டாட்டம்,
ஏக்கம்,
வியப்பு,
எதிர்பார்ப்பு,
என சகல உணர்ச்சியும் இருந்தது
காதலைத் தவிர!

இறுதியில்
திருமணம் தான்
உணரவைத்தது
காதலை!

உண்மைக் காதல்
திருமணத்திற்குப் பின்னே
உணரப்படுகிறது!


Friday, May 22, 2009

வாயைக் கொடுத்து, வாங்கிக்கட்டிக் கொள்வது!

நிறைய சமயங்களில், அயல் நாடுகள் செல்லும் போது, நம்ம ஊரு சம்பிரதாயங்கள், Culture,அதன் விளக்கங்கள் என அயல் நாட்டினர் ஆவலாக கேட்பார்கள். அதை நாமும் பெரிய லாடு லபக்தாஸ் மாதிரி, விளக்கி சீன் போடுறது வழக்கம். இதில் சில சமயம் அவர்கள் ஆச்சர்யப்பட்டதும் உண்டு, சில சமயங்களில் நான் வாங்கிக் கொண்டதும் உண்டு.


ஒரு முறை ப்ரொஜெக்ட் டெண்டர் விஷயமாக அலுவலக நண்பர்களோடு, கொரியா போய் இருந்தோம். கொரிய மொழியில் தான் டெண்டரை சமர்பிக்க வேண்டும். அதனால எங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்தார்கள். அவர் பெயர் ஜேசன். எதைப் பற்றியும் கவலைப் படாத ரொம்ப ஜாலியான மனிதர் அவர்.


ஒரு நாள் நாங்கள், அவருடன் சேர்ந்து ஒரு ஹோட்டல் சென்று சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். அந்த மொழிபெயர்ப்பாளர் மட்டும் இடது கையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தது என் கண்களுக்கு உருத்தியது. முதல்ல கேக்க வேணாம்னு நினைச்சேன்...அப்புறம் சரி பரவால்ல கேப்போம்னு கேட்டேன். என்ன ஜேசன், இடது கையில் சாப்பிடுறீங்கன்னு கேட்டேன். எந்த கையில சாப்பிட்டால் என்ன? இதுல என்ன இருக்குன்னு கேட்டார். சரி,சாப்பிடும் போது இதை explain பண்ண கூடாதுனு நினைச்சேன். ஆனால், அவர் மறுபடியும் கேட்டதால, சொன்னேன். ஜேசன், பொதுவா எங்க ஊர்ல, இடது கையை அதுக்கு தான் use பண்ணுவாங்க.....அதனால வலது கையை தான் சாப்பிட use பண்ணுவாங்கன்னு சொன்னேன், ஏதோ நம்ம ஊரு சம்பிரதாயத்தை பெருசா விளக்கி கிழிச்ச நினைப்போட. கொஞ்சமும் இடைவெளி விடாமல் சட்டேன்று, "அப்படின்னா நான் இடது கையில சாப்பிடறது கரெக்ட் தான், அதுக்கு நான் வலது கையை தான் use பண்ணுவேன்" என்று கூலாக வெளிப்படையாக சொன்னார் ஜேசன். ஒரு நிமிஷம் எல்லோரும் சிரிச்சிட்டோம்.

தட்டப் பார்த்தோமா, சோறு திண்ணோமான்னு இருக்கறத விட்டுட்டு, யாரு எந்த கையில சாப்பிட்டா என்ன? எந்த கையில ..............என்ன? சாப்பிடற நேரத்துல, நாம சீன் போடறதுக்கு இப்படி ஒரு discussion தேவையா? இப்படி வாயைக் கொடுத்து வாங்கிக்கிறதே நமக்கு hobbya போச்சு... போங்க!

Wednesday, May 20, 2009

காலையில் ஒரு கனவு!



அமைதியான சூரிய உதயத்தில்
காகம் கரைய, குயில்கள் கூவ
தென்றல் முகத்தை முத்தமிட
என் வீட்டு மொட்டை மாடியில்
காபியுடன், புகைக்குழலையும் உள்ளிழுத்து
இயற்கையைப் பருகுகையில்.....

அடுத்த வீட்டு மாடியில்
பாவாடை தாவணியுடன்
தலையை துவட்டும்
சுமார் 18 நிரம்பிய
அழகிய பதுமை.

இயற்கை ரசிப்பைத் தள்ளிப்போட்டு,
கண்கள் அவளைப் படமெடுக்க,
மனம் அதைத் தெளிவாகப் பதிவு செய்தது.

நானே கைப்பேசியை அலறச் செய்து
அவள் கவனத்தைக் கைப்பற்ற,
கம்பன் சொன்னது போல்,
அண்ணனும் நோக்கினான், அவளும் நோக்கினாள்,
சிறிய புன்முறுவலோடு,குறும்பாய் பார்த்ததும்
அடுத்த கட்ட நடவடிக்கையை
உள்ளுக்குள் திட்ட மிட.....


எங்கிருந்தோ ஒரு சத்தமான ஒரு அழு குரல்..
உறக்கம் தெளிந்தது,
கனவு கலைந்தது,
கண் விழித்தேன்,
அருகாமையில்
என் மகன்...
"மம்மி வேணும்...மம்மி வேணும்....
டேடி...மம்மி வேணும்" என சிணுங்க.....
கனவாய்ப் போனது அந்த பாவாடைச் சிட்டு!

Monday, May 18, 2009

பிரபாகரன் ஒரு சகாப்தம்!

பெயர்: வேலுப்பிள்ளை பிரபாகரன்
பிறப்பு: 26-11-1954
இறப்பு: 18-05-2009


(வேலுப்) பிள்ளையாய் பிறந்து புலியாய் மாறிய இலங்கை தமிழரின் காவலனே!
விடுதலைப் போராட்ட மாவீரனே!
மரணத்தை முத்தமிட்ட சரித்திரமே!
சரித்திரத்தில் இடம் பிடித்த தமிழ் சகாப்தமே!

கொள்கையில் உறுதி பூண்டு,
30 ஆண்டுகளாய் சிங்கள வெறி ஆட்சியாளர்களை தூக்கமிழக்க செய்த புரட்சி நாயகனே!
கட்டபொம்மனுக்கு எட்டப்பன்,உமக்கோ Colonel கருணா,
தமிழனுக்கு துரோகி தமிழனே தான் என கூறுவது எவ்வளவு உண்மை!

வீர மரணத்தைத் தழுவிய தளபதியே,தலைவனே!
புயலுக்குப் பின் அமைதி என்பார்கள்,
இனியாவது உன் ஆத்மா ஓய்வு எடுக்கட்டும் !

என்றும் தமிழன் மனதில் தமிழ்ப் போராளியாக,
உலகத் தமிழர் வரலாற்றில் விடுதலை வேங்கையாக,
நீங்கா இடம் பிடித்த உமக்கு,
எங்கள் வீர வணக்கங்கள் !!!

Saturday, May 16, 2009

அண்ணன் வர்றார்லே!

மதுரை தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் மு.க.அழகிரி 1 லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கலைஞர்: ஏன் பா...ஸ்டாலின்.....! அழகிரிக்கு என்ன துறைல மத்திய அமைச்சர் பதவி கேட்கலாம்....ரயில்வே துறையா....வர்த்தகத் துறையா?

ஸ்டாலின்: அப்பா....அதெல்லாம் அண்ணனுக்கு ஒத்து வராது....அவருக்கு பொருத்தமான துறை, உள்துறை அமைச்சகம் தான்....இதை தானே அவர் இத்தனை வருஷமா மதுரைல பார்த்துட்டு இருந்தார்..!

திமுகவின் வாய்க்கரிசியை தடுத்த ஒரு ரூபாய் அரிசி !!


பாராளமன்றத் தேர்தல் 2009

இப்படி ஒரு அசாதாரண வெற்றி திமுகவிற்கு கிடைக்கும் என நம்மில் பலரும் எதிர்ப்பார்க்காத ஒரு முடிவு. ஏன் திமுகவினருக்கு கூட இது ஒரு ஆச்சர்யம் தான்.

அதிமுகவிற்கு பலமான கூட்டணி...திமுகவிற்கு அவ்வளவாக இல்லை...எல்லாம் சில்லறை கட்சிகள் தான் காங்கிரஸ் உட்பட. பிறகு எப்படி இந்த மகத்தான வெற்றி. காசு விளையாடியது என்று கூறினாலும், இவ்வளவு தொகுதிகளில் விளையாடுமா என்பதும் சந்தேகம் தான். அதுமட்டுமல்ல....

தினகரன் சம்பவம்,
விலைவாசி ஏற்றம்,
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் திமுகவின் நாடகம்,
மின்வெட்டு,
கலைஞர் குடும்பத்தின் குடுமிப்பிடி சண்டை மற்றும் நாடகம்,
கலைஞரின் குடும்ப அரசியல்

என பெரிய பட்டியலே இருந்தும் கூட...திமுகவை ஜெயிக்க வைத்தது எது என்று பார்த்தோமேயானால்

1.ஒரு ரூபாய் அரிசி.
2. ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில், அரசு ஊழியர்களின் எதிரான போக்கு.
3. கலைஞர் சொன்னபடி கலர் டிவி.
4. நல்ல ரோடுகள்,மற்றும் பாலங்கள்.
4. விஜய்காந்த் பிரித்த அதிமுகவின் ஓட்டு.

என்ன தான் நம்ம, இணையங்களிலும், தொலைக்காட்சிகளிலும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் எதிராக பேசினாலும், நம்ம எல்லோரும் ஓட்டு போடுகிறோமா என்று கேட்டால்...நிச்சயம் மிக மிக மிக குறைவு தான்! எப்பொழுது படித்தவர்கள் பெரும்பாலானோர் ஓட்டு போடுகிறார்ளோ, அப்பொழுது தான், இங்கு பேசுகிற வாதங்கள் ஓட்டுக்களாக மாறும் என நம்பலாம்.

ஆக மொத்தம், இந்த தேர்தலில், திமுகவிற்கு விழ இருந்த வாய்க்கரிசியை தடுத்து, வெற்றிக் கனியாக மாற்றிய பெருமை நிச்ச்யம் ஒரு ரூபாய் அரிசிக்கே சேரும் !

எது எப்படியோ...மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு !

Monday, May 11, 2009

பாமக கொள்கை விளக்கப் படம்!


அன்புமணி ராமதாஸ்: அப்பா...எனக்கு என்னவோ, நம்ம கொள்கையைப் பற்றி தான் கலைஞர் டிவில documentary போட்டு இருக்காங்களோன்னு doubtஆ இருக்கு பா....!@?





காதல் Vs கல்யாணம்


ஆசிரியரிடம், "காதல் என்றால் என்ன?" என்றான் மாணவன்.

"இதற்கு நான் பதில் கூறவேண்டும் என்றால், வயல் வெளிக்கு சென்று, அங்குள்ள சோளத்தில், பெரிய சோளம் ஒன்றைக் கொண்டு வா...அப்பொழுது சொல்கிறேன்!" என்றார் ஆசிரியர்.


"ஆனால் ஒரு நிபந்தனை! ஒரு சோளத்தை ஒரு முறை தான் கடக்க வேண்டும். திரும்பி வந்து எடுக்கக் கூடாது." என நிபந்தனை போட்டார் ஆசிரியர்.


மாணவன், ஆசிரியர் சொன்னபடியே, பெரிய சோளத்தை தேட ஆரம்பித்தான். முதலில் ஒரு சோளத்தைப் பார்த்தான். அடுத்தது அதை விட பெரியதாக இருந்தது. இப்படி, அடுத்த சோளத்தைப் பார்த்ததும், அடுத்தது இதை விட பெரியதாக இருக்கும் என நினைத்து, ஒவ்வொன்றாக கடந்து சென்றான். வயல் வெளியை பாதி கடந்த சமயத்தில், தான் பெரிய சோளத்தை கடந்து வந்துவிட்டதாக உணர்ந்தான். நிபந்தனையின்படி, திரும்பி வரக் கூடாதே...அதனால், வெறும் கையுடன் வந்தான் மாணவன்.


"இது தான் காதல்! சிறந்த காதலை தேடிக் கொண்டே இருப்பார்கள். பிறகு மனம் தெளிந்து பார்க்கும்போது , அந்தக் காதலை தவற விட்டிருப்பார்கள்" என்றார் ஆசிரியர்.


(அதாவது, நம்ம பாஷையில், சுமாரான Figureஅ எல்லாம் விட்டுட்டு, Super Figure தான் வேணும்னு தேடி, தேடி போய் அலைந்து, கடைசில, உள்ளதும் போன கதை ஆகிவிடாமல் பாத்துக்கணும்னு சொல்றார் வாத்தியார்)

"சரி,அப்படியென்றால், கல்யாணம் என்றால் என்ன?" என்றான் மாணவன்.
"இப்பொழுதும் நீ அதே தோட்டத்துக்கு சென்று பெரிய சோளத்தை கொண்டு வா! அதே நிபந்தனைகள் பொருந்தும்", என்றார் ஆசிரியர்.

கடந்த முறை செய்த தவறை மறுபடியும் செய்யக் கூடாது என்று நினைத்த மாணவன், வயல் வெளியை கொஞ்சம் கடந்த பிறகு, ஒரளவுக்கு உள்ள ஒரு சோளத்தை மிகவும் சந்தோஷமாக எடுத்துக் கொண்டு ஆசிரியரிடம் திரும்பினான் மாணவன்.


"பார். இந்த முறை நீ ஒரு சோளத்தோடு வந்திருக்கிறாய். அதுவும் உனக்கு பிடித்த, இது தான் அங்கு இருக்கும் சோளத்திலேயே பெரிய சோளம் என்ற நம்பிக்கையோடும்,திருப்தியோடும் வந்திருக்கிறாய். இது தான் கல்யாணம்", என்று முடித்தார் ஆசிரியர்.


சமீபத்தில் நான் படித்த, எனக்கு பிடித்த ஆங்கில சிறு கதையில், இதுவும் ஒன்று. கொஞ்சம் கற்பனை கலந்து, தமிழில் உங்கள் பார்வைக்காக!

Friday, May 8, 2009

ஔவை...டபால்

இரண்டு நாட்களுக்கு முன்பு, என் மகன் தீபுவிற்கு, புதிதாக ஒரு தமிழ் உயிர் எழுத்துக்கள் பயிலும் Chart வாங்கினேன். என் மனைவி அவனுக்கு, அம்மா, ஆப்பிள்,இலை,ஈ,உரல்,ஊசி.......ஔவை,எஃகு..என ஒவ்வொன்றாக சொல்லி கொடுத்தாள். ஓரிரு மணி நேரத்தில் அந்த படங்கள் அவனுக்கு கொஞ்சம் familiar ஆயிடுச்சு.


நான் போய், ஒவ்வொன்றாக, கை வைத்து, தீபு இது என்ன? அது என்ன? என கேட்டு, அவன் பதில் சொல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு, நான் ஔவையின் படத்தின் மீது கை வைத்து "தீபு இது யார்?" என்று கேட்டேன். அதற்கு அவன் "ஔவை, டபால்" என்றான். "ஔவை சரி, அது என்னடா டபால்?" என மறுபடியும் கேட்டேன் "ஔவை, டபால்" என கூறி, கையை ஓங்கி அசைத்தான். பிறகு தான் புரிந்து எதற்கு அந்த "டபால்" என்று.


உங்களுக்காக, அந்த ஔவை படம் இதோ.




ஆத்திச்சூடி பாடிய ஔவையாக நமக்கு தெரிபவர்,
கோல் எடுத்து அடிக்கும் ஔவையாக என் பையனுக்கு தெரிந்து இருக்கிறார்!

Thursday, May 7, 2009

சன்/கலைஞர் டிவி Vs ஜெயா டிவி

நம்ம தமிழ் நாட்டில் இருக்கும் செய்தி சேனல் மாதிரி ஒரு FRAUD (in INFORMATION) கும்பல் வேறு எந்த ஊரிலும் பார்க்க முடியாது. மக்களுக்கு சரியான, உண்மையான செய்தியை பாரபட்சமின்றி கொடுக்கும் சேனல் தமிழகத்தில் இல்லாதது, நமக்கெல்லாம் பெருத்த ஏமாற்றம் தரும் உண்மை தான்.


எந்த சேனல்ல நியூஸ் கேட்டாலும், இது உண்மையா?...நிஜமாகவே இப்படி தான் நடந்துச்சா?....ஆங்கில சேனல்ல வேற மாதிரி சொன்னாங்களே....நம்ம எல்லோரும் Match Fixing தான் கேள்விப்பட்டிருப்போம், ஆனா நம்ம தமிழ் நாட்டுல News Fixing தான்.


ஒவ்வொரு குப்பை கட்சிக்கும், ஒவ்வொரு சேனல். நியூஸ் ஒன்று தான், ஆனால் அதனை சொல்லும் முறை தான் ஒவ்வொரு சேனலுக்கும் உள்ள வித்தியாசம். ஓரளவுக்கு படித்த நமக்கே இவ்வளவு குழப்பம்னா, சாதாரண பாமர மக்கள் இந்த செய்திகளை,பொய் மூட்டைகளை, அப்படியே நம்பி விடுவதில் ஆச்சர்யமில்லை.


ஒரே செய்தியை வெவ்வேறு சேனல்கள், எவ்வாறு சொல்கின்றன அல்லது திசை திருப்புகின்றன என்பதைப் பார்ப்போம். இது கற்பனை கலந்த உண்மை.



செய்தி
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரமாக,கன மழை பெய்து வருகிறது.

சன்/கலைஞர்: பலத்த மழை. சென்னை மக்கள் மகிழ்ச்சி!
ஜெயா: பலத்த மழையால், தென்மாவட்ட விவசாயிகள் அவதி.

செய்தி
இலங்கையில் 105 தமிழர்கள் பலி.

சன்/கலைஞர்: (இந்த செய்தி வராது. அதற்கு பதிலாக..) இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்கள் அனுப்ப கலைஞர் கடிதம்.
ஜெயா: அப்பாவி இலங்கைத் தமிழர்கள் 150 பேர் பலி. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக அரசு, இந்த படுகொலைகளுக்கு உடந்தை என வைகோ பேட்டி.

செய்தி
ஜெயலலிதாவுக்கு ராகுல் காந்தி அழைப்பு. ஒத்த கருத்துடைய தலைவர்களான நிதிஷ் குமார், ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு போன்றவர்களுடன் கூட்டணி வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார்.

சன்/கலைஞர்: (இந்த செய்தி வராது. அதற்கு பதிலாக..) நாற்பது இடங்களிலும், திமுக கூட்டணி வெற்றி பெறும் என தமிழக காங்கிரஸ் குழுத் தலைவர் குலாம் நபி ஆசாத் தகவல்.
ஜெயா : மைனாரிட்டி திமுக அரசு, இந்தத் தேர்தலில் பெரும் தோல்வி அடையும் என்பதை உணர்ந்த ராகுல் காந்தி,அதிமுகவை தனது கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

செய்தி

ஒரு ரூபாய் அரிசித் திட்டத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு.

சன்/கலைஞர்: கலைஞரின் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்திற்கு அகில இந்திய அளவில் பெரும் வரவேற்பு.
ஜெயா: ஒரு ரூபாய் அரிசி என்று சொல்லி மைனாரிட்டி திமுக அரசு, அரிசிகளை கடத்துவதாக பொது மக்கள் அவதி.

செய்தி
சேது சமுத்திர திட்டம் நிறை வேற கோரி தமிழக அரசு விடுத்த பந்த் குறித்து உச்ச நீதி மன்றம், "நீங்கள் எல்லாம் சட்டத்திற்கு மேலானவர்களா?" என தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது.

சன்/கலைஞர்: பொது மக்களின நலனைக் கருத்தில் கொண்டும், சாதாரண மக்கள் அவதி படக் கூடாது என்ற நல்ல நோக்கில், பந்த் போராட்டத்தை
விலக்கிக்
கொண்டு, அதற்கு பதிலாக உண்ணாவிரதமாக மாற்றிக் கொண்டார்.
ஜெயா : இதைப் பற்றி ஒரு அரை மணி நேர அறிக்கை.அதாவது leftla supreme court படம், rightla Scroll text. இதனை வாதாடிய வக்கீலுக்கு கூட அவ்வளவு detail தெரிந்து இருக்காது.

செய்தி
சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில், பெரும் வன்முறை. காவல் துறையினருக்கும், வக்கீல்களுக்கும் மோதல். பலர் காயம்.

சன்/கலைஞர்: "வன்முறைச் சம்பவம் நிகழாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க் வேண்டும்", அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் கலைஞர் ஆணை. "மருத்துவமனையில் இருந்து Ambulance மூலம் உயர் நீதிமன்ற நீதிபதியிடம் நேரில் சென்று விளக்கம் தர தயார்" என்று கலைஞர் அறிவிப்பு.
ஜெயா: (அறை மணி நேர அறிக்கை,அழு குரல்கள், என ஒரு பெரிய ஒப்பாரியே வைப்பார் செய்தி வாசிக்கும் அப்பாவி வாத்து)

இப்படி இருக்கு நம்ம நிலைமை.

மத்தியில், செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை என்ற அமைச்சகமும், அதற்கென ஒரு அமைச்சரும் இருக்க்றார். MidNight Masala, FTV, சனிக் கிழமை இரவு படங்களை தணிக்கை செய்வதில் காட்டும் ஆர்வத்தில்,ஒரு 5 சதவிகிதமாவது இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்!

என்னமோ போங்க!

ஆடாதடா...ஆடாதடா.. மனிதா...
ரொம்ப ஆட்டம் போட்டா....அடங்கிடுவே..மனிதா!

ஆஸ்கர் நாயகன்


World's Most Prestigious film awards

THE OSCAR




உலக அரங்கில் ஒரு சிங்கத் தமிழன் !



NOMINATION FOR
ACTOR IN LEAD ROLE

ARE.....


AND THE OSCAR GOES TO........


Mr.M.Karunanidhi for his spectacular performance in the movie


"கலைஞரின் உண்ணாவிரதம்"




Tuesday, May 5, 2009

அயன் -திரை விமர்சனம்

நடிப்பு :
சூர்யா,
தமன்னா,
பிரபு,
கன்,
கருணாஸ்,
ஆகாஷ்தீப் சேகல்,
ரேணுகா,
மற்றும் பலர்

இயக்கம்: K.V.ஆனந்த்
தயாரிப்பு: AVM
படத்தொகுப்பு: ஆண்டனி
ஒளிப்பதிவாளர்: M.S.பிரபு


இரண்டு கடத்தல் கும்பலுக்கு ஏற்படும் தொழில் போட்டி தான் படம். இதில் ஒரு கும்பல் நல்ல கடத்தல் கும்பல் அதாவது தங்கம், மின்னணு பொருட்கள், வைரம் கடத்துகிற கும்பல், இன்னொரு கும்பல் கெட்ட கடத்தல் கும்பல் அதாவது போதை பொருள் கடத்துறாங்க...அடிச்சு புடிச்சு யாரு ஜெயிக்கிறாங்க..அப்படிங்கறது தான் கதை சுருக்கம்.

இவ்வளவு, சாதாரணமான கதையை வைத்துக்கொண்டு, இவ்வள்வு stylishஆ,அழகாக, ரசிக்கும்படியாக, விறு விறுப்பாக படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர் K.V.ஆனந்த். ஆம், இவர் அதே Cinematographer தான்.
சூர்யா(தேவா) , படத்தில் பிண்ணி, பெடல் எடுத்து இருக்கிறார். மிடுக்கான தோற்றம், சுறுசுறுப்பான நடிப்பு,சிறந்த சண்டைக் காட்சிகள் என கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

பிரபு (தாஸ் அண்ணன்) இவர் தான் படத்துல நல்ல கடத்தல் கும்பலோட தலைவர். பொருத்தமான வேஷம். கம்பீரமான தோற்றம்.கணீர் என்று குரல். இப்படி, பிரபு வருகிற காட்சி எல்லாம், மற்ற அனைத்து நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார்.

ஜகன்(சிட்டி) ,கருணாஸ்(டில்லி) சூர்யாவின் நண்பர். ஜகனின் தங்கையாக தமன்னா. அழகு பதுமையாக வந்து போகிறார். பாடல் காட்சிகளில் குஷிப்படுத்துகிறார். வேகமான திரைக்கதையால் என்னவோ, தமன்னாவிற்கு, பெரிய வேடம் இல்லை.

ஜகனுக்கு இந்த படத்தில் நல்ல ரோல். நகைச்சுவையையும், குணசித்திரத்தையும் கலந்த மாதிரியான வேடம். திறம்பட செய்து இருக்கிறார்.
வில்லன் ஆகாஷ்தீப் சேகல் (அகிலேஷ்) தான் கொஞ்சம் Weak. பிரபுவோட கம்பீரமான நடிப்புக்கு முன்னாடி, அவர் பேசும் காட்சிகள் சரியா எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் அருமை.

குறிப்பாக,
பல பலக்குற பகலா...நீ...
விழி மூடி யோசித்தால், அங்கேயும் வந்தாய், முன்னே முன்னே..
நெஞ்சே..நெஞ்சே..நீ எங்கே..நானும் அங்கே...


தம் அடிக்க போக விடாம்ல் தடுக்கும் அளவிற்கு ஹாரிஸ் ஜெயராஜின் மெட்டுக்கள், நம்மை கட்டிப் போடுவது உண்மை.

படம் ரொம்ப stylishஆ வந்து இருப்பதற்கு முக்கிய காரணம் படத்தின் ஒளிப்பதிவாளர் M.S.பிரபு. (May be ஆனந்த் அவர்களின் மேற்பார்வையில் இருக்கலாம்)

காங்கோ, டான்சானியா,போட்ஸ்வானா என பல புது புது இடங்களில் படம் பிடித்திருப்பது அருமை.

குறிப்பாக காங்கோவில் நடக்கும் சண்டைக் காட்சி, படத்திற்கு பெரிய பலம், சூப்பர் அப்பு!

படத்தில் பெரிய குறை என்று ஒன்றுமில்லை. முதல் அரை மணி நேரம் இருந்த விறுவிறுப்பு போக போக குறைவது போல ஒரு Feeling. கடத்தலை ஊக்குவிப்பது போல காட்சி அமைப்புகள் இருக்கு.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். சமீபத்தில் வந்த திரைப்படங்களில், அயன் நிச்சயமாக ஒரு நல்ல பொழுது போக்கு படமாக மக்கள் மனதில் நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Monday, May 4, 2009

வாயே திறக்காத தங்கபாலு!

கடந்த ஐந்து ஆண்டுகளில், பாராளமன்றத்தில் சும்மா ஒரு பேச்சுக்கு கூட ,வாயே திறக்காத ஒப்பற்ற மக்கள் தலைவர் தங்கபாலு. நம்ம தங்கபாலு பேசும் ஓரிரு வார்த்தைகளில் மிகவும் முக்கியமான வார்த்தை " அன்னை சோனியா ..அன்னை சோனியா..".

இவரைப் பற்றி விரிவாக எழுத ஆசை தான், ஆனால் எதாவது உருப்படியா செஞ்சா தானே எழுத முடியும்....தங்கபாலு சர், தயவு செய்து, அடுத்த முறையாவது, ஏதாச்சும் பேசுங்க பாராளமன்றத்துல...உங்களை, சேலத்து மக்கள் தேர்ந்து எடுத்து, இவ்ளோ செலவு செஞ்சி அனுப்பி வைக்கிறது சும்மா போய் சீட்டை தேய்க்கவா? , மக்களுக்கு ஏதாச்சும் செய்ய try பண்ணுங்க சர்!

கருத்தை படமாக்கிய டிசைனர் ஜனாவிற்கு என் நன்றி.

வருண் காந்தி As வடிவேலு நாய் சேகர்


போலீஸ் : யார்ரா இவன் குழந்தை, வண்டில வந்து ஏர்றது?

வருண் காந்தி : நானும் Leader தான் யா!

போலீஸ் : உன்னை பார்த்தா அப்படி தெரியலையே? நான் எப்படி நம்ப?

வருண் காந்தி : Pillibhitல எப்படி பேசினேன் பார்த்தியா?

போலீஸ் : பேசினா ...நீ பெரிய Leaderஆ?

வருண் காந்தி : News Channel மத்தியில் நான் Leaderஆ form ஆய்ட்டேன் யா..நம்பு யா...

(வருண் காந்தி ஓடி வந்து போலீஸ் ஜீப்ல ஏறுகிறார்..)

வருண் காந்தி : ஏ...நான் ஜெயிலுக்கு போறேன்....ஜெயிலுக்கு போறேன்...ஜெயிலுக்கு போறேன்...எல்லாரும் பாத்துக்கோங்க...நானும் Leader தான்....!

Saturday, May 2, 2009

பிணம் தின்னும் ஓனாய்களும் , பணம் தின்னும் மருத்துவமனைகளும்

ஆழ்ந்த உறக்கம். இரவு சுமார் 1:30 மணி இருக்கும், கைப்பேசி ஒலித்தது. நெருங்கிய நண்பர் ஒருவர், Office Partyஇல் , கீழே விழுந்து அடி பட்டுவிட்டது, மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம் என்ற தகவல். அவசர அவசரமாக கிளம்பினேன். நகரின், மையப் பகுதியான GN Chetty Roadஇல் , ஒரு கிராமத்து இயக்குனர் பெயரில் அமைந்துள்ளது அந்த மருத்துவமனை. எனக்கு அந்த மருத்துவமனைக்கு செல்வது அதுவே முதன் முறை. மருத்துவமனையின் தோற்றம் போல் அல்லாமல் ஒரு மூன்று நட்சத்திர ஓட்டல் போல இருந்தது அந்த இடம்.

நண்பரின் கை விரலில் வெட்டுப் பட்டு இருந்தது, கால்களில் கொஞ்சம் காயம். ரத்தம் வழிவதை தடுக்க dressing மட்டும் செய்திருந்தார்கள். Party என்பதால், நண்பர் கொஞ்சம் நிலை குலைந்து காணப்பட்டார். மற்றபடி Normal தான். அந்த நேரத்திலும், நண்பர், என்னிடத்தில், "கபிலா, Watch and Purse அங்க கொடுத்து இருக்கேன்...பார்த்துக்கோ"ந்னு சொன்னார். வாங்கிக் கொண்டேன்.

சரி, டாக்டர், என்ன சொன்னார்னு, வெளியில் இருந்த நண்பர்களிடம் விசாரித்தேன். அவர்கள் சொன்ன பதில், "He is Out of Danger". என்னடா இந்த ஒரு சின்ன காயத்துக்கு, ரமணா படத்துல வர்ர டாக்டர் மாதிரி இவ்வளவு Build Upஆனு நினைச்சேன். மருந்து, syringe,Gloves, tissues,அது இதுன்னு எல்லாம் இரண்டு இரண்டா வாங்க சொன்னாங்க. மருத்தவமனையில் இருந்த மருந்து கடையில் வாங்கிட்டு வந்து கொடுத்தோம்.வாங்கிட்டு வந்ததில், 1/4 தான் use பண்ணாங்க, மற்றவையை அப்படியே வச்சிட்டாங்க. Just First Aid மட்டும் செஞ்சாங்க. சரியான நிலைமையில், இல்லாததால், காலையில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று சொன்னார்கள்.

பொழுது விடிந்தது. டாக்டர் வந்து பார்த்துவிட்டுச் சென்றார். என்ன சிகிச்சை என்று கேட்டோம். போட்டார் பாருங்க ஒரு குண்டு, "விரல் நிரம்பு வெட்டு பட்டு இருக்கு, உடனே Surgery பண்ணனும், இல்லைனா futurela இந்த விரலின் செயல்பாடுகள் பாதிக்கப் படலாம். Surgery cost Rs. 55,000! " அப்டின்னாரு டாக்டர். அடேங்க்கப்பா...55,000 ரூபாய். இந்த சின்ன காயத்துக்காகவா? ஆஹா, வடிவேலு சொல்ற மாதிரி, "உங்களை எல்லாம் பார்த்தா, எனக்கு டாக்டர் மாதிரி தெரியல !, ஏதோ யமன் Mufti ல வந்த மாதிரியே இருக்கே !" எங்களால் நம்ப முடியவில்லை. உடனே நாங்க வேறு மருத்துவமனைக்கு போகிறோம் என்று சொன்னோம். வந்தது Bill Rs. 8,500. First Aid + One Night Stay =Rs.8500 . விட்டா போதும்னு கட்டிட்டு வந்துட்டோம். வேறு மருத்துவமனையில் கேட்ட கேள்வி, "Surgery செஞ்சி என்ன பண்ண போறாங்களாம்? " என்று சொல்லி, தையல் போட்டு அனுப்பி வைத்தனர் Rs. 250 சார்ஜ் பண்ணார். சுகம் ஆயிடுச்சி....இப்படி இருக்கு இந்த மருத்துவமனை. அதன் பிறகும் கூட, ஒரு சில நண்பர்கள் பட்ட அவதிக் கதைகள், கொள்ளைச் சம்பவங்கள் நிறைய உண்டு. உஷார்!

இது மட்டும் அல்ல, எங்கள் அலுவலகத்தை சேர்ந்த ஒருவர், ரயில் பிளாட்பாரம் ஒன்றில் விழுந்து, தலையில் அடிபட்டு, கோமா, நிலையில், பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்து இறந்து போனார். 3-5 லட்சம் செலவானது. ஒரு லட்சம் ரூபாய் மிச்சம் கட்ட வேண்டி இருந்தது. இறந்தவரின் உடலை கூட கொடுக்காமல் கொடுமைப் படுத்தியது அந்த மருத்துவமனை. இதற்கு கூட ஒரு சிபாரிசு பிடித்து, கெஞ்சி உடலை வாங்கினார்கள் பெற்றோர்கள் ! தாம்பரத்தில் உள்ளது அந்த மனிதாபிமானமுள்ள நல்ல மருத்துவமனை!

மருத்துவத்தை, சேவையாக செய்து வரும், ஆயிரம் ஆயிரம் புனிதமான மருத்துவமனைகளுக்கு நடுவில் இப்படியும் சில பிணம் தின்னிகள் இருக்கத் தான் செய்கின்றன!

Indian Medical Association (IMA) போன்ற அமைப்புகள், வெறும் பொருட்கள் அங்கீகாரம் அளிக்கும் அமைப்பாக இல்லாமல், இவை போன்ற மருத்துவமனைகளின், அக்கிரமங்களையும், அராஜகங்களையும் தட்டிக் கேட்கும் அமைப்பாக இருந்தால், மக்கள் ஏமாற்றப் படாமல் தவிர்க்க முடியும்.!

LinkWithin

Blog Widget by LinkWithin