Friday, August 28, 2009

தாத்தா...தப்புப் பண்ணிட்டேன் தாத்தா...!

தமிழ்நாட்டுல ஒரு ஆம்பளை கூட சரியான ஆண்மைத் தன்மையோட இல்லங்கறது தான் உண்மை. சின்ன வயசுலே இருந்தே அவன் தப்பான பழக்கத்துக்கு ஆளாயிடுறான். சராசரியா, ஒரு பையன், 14,15 வயசுல தப்பு பண்ண ஆரம்பிக்குறான்(என்ன தப்புன்னு எல்லாம் கேக்கக் கூடாது). அவன் பண்ற தப்புல ஒவ்வொரு முறையும் 40 சொட்டு ரத்தம் வீணா போகுது. இப்படி செஞ்சி செஞ்சி, அவன் கல்யாண வயசு வர்றதுக்குள்ள, நாடி நிரம்பெல்லாம் தளர்ந்து போய், எல்லா சக்தியையும் இழந்துட்டு நிக்குறான். அதுக்கு அப்புறம், தாத்தா தப்பு பண்ணிட்டேன் தாத்தா, அடுத்த மாசம் எனக்கு கல்யாணம் தாத்தான்னு என் கிட்ட ஓடி வர்றான்....அவனை எல்லாம் பார்த்தா எனக்கு பளார்னு அறையனும் போல இருக்கும்...இந்த நிலைமையில இருக்குற நீ கல்யாணம் பண்ணிக்கலாமா? வீணா கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட வாழ்க்கைய நாசம் பண்ணிடாத...உன்ன எல்லாம் என் பேரப்பசங்களா நினைச்சி தான், திரும்பி திரும்பி இதையே சொல்லிட்டு வர்றேன். உங்க அப்பா அம்மா கிட்ட சொல்ல கூச்சப்பட்டீன்னா....நீ மட்டும் தனியா வா...முதல்ல குணம் ஆக்கிட்டு, அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ...ஆசையா வர்ற பொண்ண ஏமாத்தாத....


ஐயா....இதெல்லாம் நான் சொல்லலிங்க....எந்த தமிழ்ச் சேனல் பக்கம் திருப்பினாலும், நம்ம தாத்தா : ) வந்து நம்மல பாடா படுத்துறார். அவர் பேர் சொல்லணும்னு அவசியமே இல்லை...அந்த அளவுக்கு அவர் பாப்புலரான தாத்தா. அவர் சொல்கிற வைத்தியம் உண்மையோ, பொய்யோ , ஆனா, இந்த மாதிரியான எசக்கு சக்கான மேட்டர்ல அப்பாவி பசங்கள பயமுறுத்தி, பணம் பறிக்கும் வேலை மட்டும் நடந்துகிட்டு தான் இருக்கு.


நிஜமாவே, அவர் பேசுறத எல்லாம் பார்த்தா, நல்லா இருக்குறவனுக்கு கூட ஒரு வித பயம் வந்துடும். ஏன்னா, அவர் சொல்ற அறிகுறிகள் பாத்தீங்கன்னா ரொம்ப பொதுவானவை. ஆங்கில மருத்துவத்தில், இதெல்லாம் நார்மல் தான், அனைவருக்கும் இவ்வாரெல்லாம் இருப்பது இயல்பு தான்னு சொன்னாலும், நம்ம தாத்தா விடுற உடான்சும், அவர் சொல்கிற விதமும், (ரொம்ப விறுவிறுப்பாக இருந்தாலும்), அனைவருக்கும் ஒரு வித பயத்தை ஏற்படுத்தக் கூடியவை. அதிலும், இது போன்ற விஷயங்களில் பெரும்பாலும் நம்பி ஏமாறுகிறவர்கள் நன்கு படித்த நல்ல வேலையில் உள்ள இளைஞர்கள் தான்.

பொதுவாகவே, போர் யுக்தி முறைகளில் Psychological Warfare என்ற ஒரு வகை உண்டு. அதாவது எதிரியின் படைகளின் மன வலிமையையும், உற்சாகத்தையும் அழிப்பது. ஆப்கான் போர் தொடங்கிய போதே, அமெரிக்கா ஹெலிகாப்டரின் மூலமாக துண்டு பிரசுரங்கள் வினியோகித்ததாம். அதில் "அமெரிக்க ராணுவம் பல முக்கிய இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் மற்ற இடங்களையும் பிடித்துவிடுவோம். பல முக்கிய தாலிபான் தலைவர்கள் அவ்ர்களாகவே எங்களிடம் வந்து சரண் அடைந்து வருகின்றனர். நீங்களும் சரண் அடைந்து விடுங்கள். இல்லையேல் எங்கள் போரின் உச்சத்தைப் பார்க்க நேரிடும்." என்பது போல எழுதி வினியோகித்தனர். இப்படி தான் ஒருத்தனை மனதளவுல பலவீனப் படுத்தி, பணத்தை பறிக்க நம்ம ஊர்ல பெரிய கூட்டமே தயாரா இருக்குங்க.

அதே மாதிரி தான் பல சித்த வைத்தியர்கள் இருக்காங்க. இவர் மட்டுமல்ல, இது மாதிரி யுனானின்னு சொல்லி ஏமாத்துறது, ஏன் லேகியம் கூட விக்குறாங்க டிவி மூலமா.

இதுல என்ன காமெடின்னா, தாத்தாவை அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் சரமாரியாக கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனா, நம்ம தாத்தா திடீர்னு "இதோ பாருப்பா, உனக்கும் தான் சொல்றேன், நீயும் என் பேரன் மாதிரி, நீ சின்ன வயசுல நிறைய தப்பு பண்ணி இருந்தா சொல்லிடு, எந்த பிரச்சினை இருந்தாலும் சரி பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ...வீணா ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணாத " அப்படின்னார். அந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு எப்படி ரியாக்ட் பண்றதுண்ணே தெரியாம வழிஞ்சது சிரிப்போ சிரிப்பு.

எந்தெந்த விஷயங்களை நாம் வெளிப்படையாக பேச கூச்சப்படுகிறோமோ, அதையே மூலதனமாக வைத்து, இவரைப் போல பல வைத்தியர்கள் தங்கள் கஜானாவை நிரப்பி வருகிறார்கள். பணம் மட்டும் விரயமானால் கூட பரவாயில்லை, மனதளவில் தாக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடியவைகளாக இருக்கிறது இவர்களது தந்திர பேச்சுக்கள்.

இதை எல்லாம் தடுக்கணும்னா, எந்த ஒரு விஷயமா இருந்தாலும், பெற்றோர்களிடத்தில் ஆலோசனை கேட்பது தான் மிகச் சிறந்த வழி. பெற்றோர்களும் பிள்ளைகளிடம் எல்லா விஷயங்களையும் மனம்விட்டு பேசத் தொடங்க வேண்டும். முன்பெல்லாம் உடல் சம்பந்தமான, செக்ஸ் சம்பந்தமான விஷயங்களை பொதுவாக வெளிப்படையாக பேசமாட்டார்கள். ஆகையால், அன்றைய பெற்றோர்கள், இவற்றை எடுத்தக் கூறவில்லை. ஆனா, இப்போ, தொழில்நுட்பம் வளர்ச்சியின் காரணமாக சகல விஷயங்களும் மிகவும் இளம்பருவத்திலேயே பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதனால, யாரோ ஒரு மூன்றாவது மனிதர் மூலமாக நம் பிள்ளைகளுக்கு இவைகளை தெரியப்படுத்துவதை விட, நாமே நல்ல விதத்தில் எடுத்துக் கூறுவது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். பிள்ளைகளும் தமக்கு உள்ள பிரச்சினைகளை கூச்சப்படாமல் வெளிப்படையாக பெற்றோர்களிடம் சொல்ல இது வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது !

டேய், இதைப் பற்றி எல்லாம் எப்படிடா பிள்ளைங்க கிட்ட பேச முடியும்னு நீங்க கேக்குறது புரியுது.....

6 comments:

Unknown said...

we usually saw that pgm when I was stayed with my friends in chennai....sema timepass aa and jollya irukkum boss...:)))))

கபிலன் said...

"Kamal said...
we usually saw that pgm when I was stayed with my friends in chennai....sema timepass aa and jollya irukkum boss...:))))) "

நிஜம் தாங்க...ரொம்ப entertaininga நிகழ்ச்சியை நடத்திட்டு வர்றார் அவர் : )
தங்கள் வருகைக்கும் கருத்த்ற்கும் நன்றிங்க கமல்!

தேவன் மாயம் said...

இதை எல்லாம் தடுக்கணும்னா, எந்த ஒரு விஷயமா இருந்தாலும், பெற்றோர்களிடத்தில் ஆலோசனை கேட்பது தான் மிகச் சிறந்த வழி. பெற்றோர்களும் பிள்ளைகளிடம் எல்லா விஷயங்களையும் மனம்விட்டு பேசத் தொடங்க வேண்டும். //

மிகச்சரி நண்பரே!!

கபிலன் said...

"தேவன் மாயம் said...
இதை எல்லாம் தடுக்கணும்னா, எந்த ஒரு விஷயமா இருந்தாலும், பெற்றோர்களிடத்தில் ஆலோசனை கேட்பது தான் மிகச் சிறந்த வழி. பெற்றோர்களும் பிள்ளைகளிடம் எல்லா விஷயங்களையும் மனம்விட்டு பேசத் தொடங்க வேண்டும். //

மிகச்சரி நண்பரே!!"

தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தேவன் மாயம்!

Anonymous said...

நண்பா .. இப்போ அந்த தாத்தா . police custody ல . டிவி நியூஸ் ல பாத்தேன்.

கபிலன் said...

"Anonymous said...
நண்பா .. இப்போ அந்த தாத்தா . police custody ல . டிவி நியூஸ் ல பாத்தேன்."

நிஜமா அனானி...
வீட்டுக்கு போய் தான் டிவி பாக்கணும்....

LinkWithin

Blog Widget by LinkWithin